சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது பரோல் விடுப்பில் வெளியே வந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் தமது மகன் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஒருமாதம் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
கொரோனா பரவலின் காரணமாக தமது மகனுக்கு விடுப்பு வழங்க வேண்டும் எனவும் அவரை தமது வீட்டில் வைத்து பார்த்துக்கொள்வதாக தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை அனுப்பி இருந்தார். புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூ டிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று சிறை விதிகளில் தளர்வு அளித்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறப்பு விடுப்பு அளித்து உத்தரவிட்டுளளர்.
ஏற்கனவே சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு கோளாறுகளுக்காக சிகிச்சை பெறுவதற்காக பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது தமிழக முதலமைச்சர் ஒருமாதம் சிறப்பு விடுப்பு அளித்து உத்தரவிட்டதை தொடர்ந்து பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்படுகிறார். இன்று பிற்பகலுக்கு பிறகு அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்படுவர் என சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.